இந்தி்ய வாக்காளன்

வாக்குச் சாவடியில்

விரல் நுனியில்

வாங்கிய  மையை

தலையில் தடவினான்...


வருங்கால ஆட்சியாளர்கள்...

தலையில்

எதைத்தடவினாலும்  

ஏற்றுக்கொள்ள

ஏதுவாக...

வணங்கா மண்ணே...

எங்கள்
பாட்டிகளும் பாட்டன்களும்
அம்மாக்களும் அப்பாக்களும்
வாழ்ந்த போதும்
வீழ்ந்த போதும்
மூச்சடக்கி முடிந்த போதும்
வாரி அணைத்த மண்.

எங்கள்
தலை வணங்கா
தமிழீழ மண்ணே...
உன்னையும்
தூளாக்கி
தூக்கி வைத்திருக்கிறோம்
சலனமில்லா
சயனைடு குப்பிக்குள்...

உயிர்விடும் போதும்
உன்னை விடவில்லை
உன்னைத் தின்றே
உயிரை உடைக்கிறோம்

உள்ளிருக்கும்
மண்ணிலிருந்து
முளைத்து வருவோம்
முன்னூறு முறை...

ஆம்...
உள்ளிருக்கும்
மண்ணிலிருந்து
முளைத்து வருவோம்
முன்னூறு முறை...


தற்காலிகமாய்...
ராஜ  விசுவாச
எச்சத்தில் முளைத்திருக்கும்
எடுபிடி காளான்களை
எரித்து...

எம் மண்ணே
பொறுத்திரு...

சரித்திரம் மாறும்
உன் தலையில்
மணிமுடி ஏறும்...