உயிரே உதிராதே !

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

என்று சொன்னான் மகாகவிபாரதி. விரிந்து பரந்து கிடக்கிறது வானம். இவ்வளவு பெரிய வானம் ஒரு மனிதனின் தலை மீது விழ வருகிறது என்று எண்ணினாலே மாண்டுபோவார்கள் பலர். இவ்வளவு சிறிய தலையின் மீது வானமே இடிந்து விழுந்தாலும் அச்சமில்லை. உயிரே போயினும் அச்சமில்லை என்கிறார் பாரதி. இத்தகைய மனநிலை இன்று எத்தனை பேரிடத்தில் காணப்படுகிறது. அஞ்சி அஞ்சி சாவதே வாழ்க்கையில் வாடிக்கையாகிப் போனது. எந்த நேரத்தில் எது நடக்குமோ? எந்நேரமும் பயம். வருவது வரட்டும் வருவதை எதிர்கொள்வோம் என்ற பக்குவம் வேண்டும். சாலையில் வண்டியில் செல்கிற போது நாய்கள் துரத்திக் கொண்டே கடிக்கிற மாதிரி வேகமாக ஓடி வரும். வண்டியை வேகமாக ஓட்டினால் அதைவிட வேகமாக துரத்தும். வண்டியின் வேகத்தைக் குறைத்து எதிர்த்து நின்றால் திரும்பி ஓடி விடும். அதைப் போல பிரச்சனைகள் வருகிற போது அதை எதிர்கொள்ளப்பயந்து ஓடி ஒளிந்தால் தீர்வு கிடைத்துவிடப் போவதில்லை. திரும்பி நின்று எதிர்கொண்டு பார்த்துவிடுவோம் என்று எதிர்த்து நின்றால் எவ்வளவு பெரிய பிரச்சனையும் எளிதில் முடிந்து விடும்.

’’ எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ’’ என்றார் அறிஞர் அண்ணா. எத்தகைய சிக்கல்கள் வந்தபோதும், பழிகள் வந்தபோதும், அன்றாட சிரமங்கள் நம்மை அமுக்குகிற போதும் தீர்வு காண்கிற தீரம் நமக்குள்ளே பெருக்கெடுக்க வேண்டும். அதை விடுத்து கோழைத் தனமாக வாழ்க்கையை மாய்த்துக் கொள்பவர்களை என்னவென்று சொல்வது? வாழ்க்கை என்கிற படகில் பயணம் செய்யும்போது மனவலிமை என்கிற துடுப்புதான் நம்மை வழி நடத்திச் செல்கிறது. ஆற்றைக் கடந்து செல்ல படகிற்கு துடுப்புதான் துருப்புச்சீட்டு. இந்த துடுப்பையே படகு பாரம் என்று நினைத்து தூக்கி எறிந்தால், ஆற்று வெள்ளம் படகை அடித்துக்கொண்டு போகும். இப்படித்தான் இன்று சில படகுகள் சின்னா பின்னமாகிப் போகிறது . வருகிற சிக்கல்களை, வலியை தாங்கி நடக்கிற தகுதிகளை வளர்த்துக் கொள்ளாமல், சிலர் மனவலிமை என்கிற துடுப்பை தூக்கி எறிந்து உயிரை உதிர்த்து விடுகிறார்கள். எள்ளளவு கஷ்டத்தையும் எரிமலையைப் போல் பாவிக்கிற மனநிலை எப்படி வருகிறது இவர்களுக்கு?

மானுட வாழ்வென்ன மறுபடியும் மறுபடியும் கிடைக்குமா?

போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து முன் செல்வேன் என்கிற கவிஞனின் வரிகளை கடைப் பிடிக்க ஏன் மறந்து போகிறோம்.

உலகத் தடகளப் போட்டியில் நேற்று முன்தினம் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன்போல்ட் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 9.58 விநாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். உலகின் அதிவேக வீரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

ஆயினும் இவரது கடந்த காலத்தை திரும்பி பார்க்கவேண்டும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னுடைய காரை ஓட்டிச்செல்கிறபோது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் இவரது இடது காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்த தடைகளை எல்லாம் மறந்து கடின பயிற்சியின் மூலம் இன்று சாதித்துக் காட்டியிருக்கிறார் உசேன்போல்ட்.

காலம் நமக்குத் தருகிற கசப்பு மருந்தைக் கண்டு, கோபத்தின் உச்சியில் மனிதன் தன்னை மறந்து முடிவெடுக்கத் திணறி மூச்சடைத்துப் போகிற மூடப்பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். தன்னை மறந்து செய்கிற தற்கொலைகளை தடுப்போம். உறவுகள் மட்டுமல்ல உலகமே நம் பெயரை உரக்கச் சொல்லட்டும். புல் பூண்டுகளைப் போல வாழ்ந்து புதைந்து போவதைவிட புத்தனைப் போல பூமியின் மீது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நம்மைப் போற்றும்படி சுவடுகளை பதித்துச் செல்வோம்.








இடைத்தேர்தல்- தொண்டாமுத்தூர் தொகுதி நிலவரம்

தமிழகத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல். கொங்குநாட்டில் கோவை மாநகரைச் சுற்றியுள்ள மிகப்பெரிய சட்டமன்றத்தொகுதி தொண்டாமுத்தூர். 393 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியின் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 3,42,000.

சென்ற 2006 தேர்தலில் இந்த தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அப்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4,20,186. இதில் பதிவான வாக்குகளின் சதவீதம் 70.65% ஆகும். 391 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. சென்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் முறையே

கண்ணப்பன் - 1,23,490 - 41.60 % ( ம.தி.மு.க)

எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் - 1,13,596 - 38.27 % (காங்கிரஸ்)

டென்னிஸ் கோவில் - 37,901 - (தே.மு.தி.க)

சின்னராஜ் - 13,545 - (பா.ஜ.க)

இது சென்ற தேர்தல் நிலவரம்.

இந்த தேர்தல் நிலவரம் பற்றி இனி பார்ப்போம்.

தொண்டாமுத்தூரை சுற்றி பொதுமக்களை பார்த்து பேசியதை உங்களிடம் சொல்கிறேன். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கந்தசாமிக்கு பலம் எதுவென்றால், தி.மு.க. வின் தேர்தல் பணிதான். அதனுடன் ஒவ்வொரு ஓட்டுக்கும் அவர்கள் கொடுக்கும் காகித கவர். பூத் சிலிப் கொடுக்கும் போதே உங்கள் வீட்டில் எத்தனை ஓட்டுக்கள் என்று கேட்டு, நான்கு ஓட்டு என்றால் நான்கு சிலிப்பும், நான்கு கவரும் கொடுக்கிறார்கள். அந்த கவரில் இருநூறு ரூபாய் இருப்பதாக சொல்கிறார்கள். இதுவே பெரும் பலம்.

கொங்குநாடு முன்னேற்றக் கழக வேட்பாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் இவரது பலம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொ.மு.க. சார்பில் கோவையில் போட்டியிட்டு 1,28,000 வாக்குகளை பெற்றதால் வாக்களர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்.

மேலும் தே.மு.தி.கவுக்கும், கொ.மு.க வுக்கும், அ.தி.மு.க போட்டியிடாததே பலம். இந்த தொகுதியில் அ.தி.மு.க போட்டியிடாதது அக்கட்சி எடுத்த தவறான முடிவு என மக்கள் சொல்கிறார்கள். அக்கட்சியின் ஓட்டுக்கள் சிதறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கம்யூனிஸ்டும், பா.ஜ.க வும் கணிசமான ஓட்டுக்களைப்பெறும். வாக்களிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இறுதி நிலவரப்படி ஏறத்தாழ 50 % வாக்குக்கள் பதிவானால் வெற்றி யாருக்கு என்று சொல்ல முடியாது. அதிக வாக்குகள் பதிவானால் மட்டுமே காங்கிரஸுக்கு சாதகமாக அமையும். குறைவான வாக்குகள் பதிவானால் கொ.மு.க. , தே.மு.தி.க. இந்த இரண்டில் ஏதோ ஒன்று வெற்றி பெற வாய்ப்புண்டு.





பூண்டு - விளக்கம்

நீண்ட நாளாக ஒரு சந்தேகம் இருந்து வந்தது. இந்த இனம் பூண்டோடு அழிந்தது என்று சொல்கிறார்களே. நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் பூண்டுக்கும் அழிவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?. தமிழ் புலவர்கள் யாரிடமாவது கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் மனதில் இருந்தது. சென்ற வாரம் பேராசிரியர் அப்துல் காதர் அவர்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்த பொழுது அவர் அதற்கு விடையளித்தார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பூண்டு என்பது மிக மிக மெல்லிய தாவரம். தாவரங்களிலேயே நுண்ணியது பூண்டு. ஆனால் நாம் உபயோகப்படுத்தும் வெள்ளை பூண்டு அல்ல. அந்த மிக மெல்லிய உயிரினம் கூட இல்லாமல் உயிரினங்கள் முற்றிலுமாய் அழிவதைத்தான் பூண்டோடு அழிந்தது என்று கூறுகிறார்கள் என்றார். மேலும் தென் மாவட்டங்களில் பூடோடு அழிந்தது என்று சொல்வார்கள். பூடு என்பதுதான் இங்கு பூண்டு என்று மறுவியுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

அரசியல்வாதி

வீட்டில்

செல்லமாய் வளர்கிறது

ஜெர்மனி தேசத்து

நாய்க்குட்டி

ஜென்னி...


வாசலில்...

வழுக்கி நிற்கும் கார்

இங்கிலாந்திலிருந்து

இறக்குமதி

செய்யப்பட்டது


வண்ண விளக்குகள்

வாடிகனிலிருந்து

வாங்கி வரப்பட்டது


பயன்படுத்தும்

பொருள்கள்னைத்தும்

பாரீசிலிருந்து

விமானத்தில்

விரைந்து வந்தவை...


வாயிலில் நிற்கும்

கூர்க்கா கூட

நேற்று வந்த

நேபாளி


இருந்தாலும்...

வாயிலிருந்து

வருகிற

வார்த்தைகளில்

மட்டும்

’’ வாழ்க இந்தியா ”

மற்றுமொரு பதிலுரை

அப்பாவி அவர்களின் கருத்துரைக்கு மீண்டும் நன்றி

தாலியை ஏன் ஆண்கள் சுமப்பதில்லை. இது உங்கள் கேள்வி. என் கேள்வி ஏன் ஆண்கள் சேலை அணிந்து கொள்வதில்லை? ஏன் ஆண்கள் தோடு போட்டுக்கொள்வதில்லை? ஏன் ஆண்கள் மூக்குத்தி போடுவதில்லை? ஏன் ஆண்கள் முத்துமாலையும், மாங்காய் மாலையும், அணிவதில்லை? ஏன் வளையல்களை அணிவதில்லை? இதையெல்லாம் நீங்கள் ஏன் கேட்கவில்லை?

இதற்கெல்லாம் என்ன பதில். பெண்களின் உடலமைப்புக்கு ஏற்ற உடைகளை அவர்கள் அணிகிறார்கள். ஆண்கள் அவர்களது உடலமைப்புக்கு ஏற்ற உடைகளை அணிகிறர்கள். இதில் ஏன் இதையெல்லாம் அணியக்கூடாது என்று கேட்பதைப் போலத்தான் உங்கள் கேள்வியும்.

ஆரம்ப காலத்திலிருந்தே பொன்னும், மணிகளும், நவரத்தினங்களையும் பெண்ணுக்கு அணிவித்துதான் அழகு பார்த்தனர். பெண்கள் ஆபரணங்களை அணிவதில் விருப்பம் உள்ளவர்கள் என்பதால், தாலியை பெண்கள் அணிவது வழக்கமாக வந்தது. ஆகஏன் ஆண்கள் சேலை அணிவதில்லை என்பதற்கு என்ன பதிலோ அதுதான், ஏன் ஆண்கள் தாலி அணிவதில்லை என்பதற்கும் பதில்.

அடுத்து ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்பது உங்கள் வாதம். ஆணாதிக்கம் எந்த யுகத்தில் இருக்கிறீர்கள் நீங்கள்? இன்று பள்ளிக்கூடங்களில் அதிக மதிப்பெண் வாங்கி ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் உருவாகி வருகிறார்கள். தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்து இருப்பவர்களும் பெண்கள் தான். கணிணி யுகத்தில் பெண்களின் கீழ் எண்ணற்ற ஆண்கள் பணிபுரிகிறார்கள். இதைவிட சின்னஞ்சிறு கிராமம் முதல் பெருநகரம் வரை குடும்பத்தில் எடுக்கப்படுகிற முடிவுகள் பெண்களைக் கலந்துதான் எடுக்கப்படுகிறது. ஆணாதிக்கம் இது சென்ற நூற்றண்டின் ஆரம்பத்தில் உபயோகிக்கப் பட்ட சொல். 21ம் நூற்றாண்டுக்கு வாருங்கள்.


என்று ஒரு குழந்தை பிறந்து அதுவும் பெண்ணாக இருந்து, ஒரு குழந்தையாக இருந்தாலும் பெண்ணே போதும் என்று முடிவு செய்தார்களோ அப்பொழுதே ஆணாதிக்கம் என்கிற சொல்லும் மறைந்துவிட்டது. நீங்கள் சொல்வதெல்லாம் எத்தனை பெண் பிறந்தாலும் ஆண்பிள்ளை வேண்டும் எண்ணிய காலம். பாரதி சொன்னதைப் போல ”வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’’ இப்படி பெண்கள் நிலை இருந்த காலம். இன்று பெண்கள் கால் சென்டருக்கு வேலைக்குச் சென்றுவிட்டு இரவு இரண்டு மணிக்கு வீடு திரும்பிக்கொண்டிருக்கிற நிலையில் இருக்கிறார்கள்.

உலகநாடுகள் இன்று பெண்களின் தலைமையை ஏற்றுக்கொண்டு விட்டது. அமெரிக்காவில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி முதல் இந்தியாவில் பிரதமர் இருந்தபோதும் அவரை வழி நடத்துகிற பெண் சோனியாகாந்தி உள்பட நிறைய நாடுகள் பெண்களின் தலைமையின் கீழ் செயல்படுகிறது. விளையாட்டுத் துறையிலும் பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்கம் அம்பேலாகி அனேக நாட்களாகி விட்டது.

தாலியின் மகிமையைப் பற்றி சொல்லியாக வேண்டும் என்கிறீர்கள். சரி சொல்கிறேன். அந்தக் காலத்தில் மக்கள் கூட்டங் கூட்டமாக வாழ்ந்தார்கள். அப்படி வாழ்ந்த போது ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு சில கட்டுப்பாடுகளை, விதிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். இன்றும் கிராமங்களில் கட்டுப்பாடுகள் உள்ளது. ஒரு சில கிராமங்களில் செருப்பு அணிவதில்லை. ஒரு சில கிராமங்களில் புகை பிடிப்பதில்லை. ஒரு சில ஊர்களில் மது அருந்தக் கூடாது. இப்படி விதிமுறைகளை விதித்துக்கொண்ட மக்கள் உண்டு. அந்த வகையில் இந்துக்கள் என்கிற ஒரு சாரார் தங்களது கட்டுப்பாடுகளில் ஒன்றாக ஒரு பெண்ணும், ஒரு ஆணும் திருமணம் என்கிற ஒப்பந்தத்தின் மூலம் இணைகிற பொழுது தங்களது சொந்தங்களின் முன்பாக உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். இப்பொழுதுதான் பதிவு அலுவலகங்கள் வந்திருக்கிறது. பதிவாளர் முன்பு இருவரும் சம்மதத்தோடு கையொப்பம் இட்டு திருமணத்தை பதிவு செய்கிறோம். அதைப்போல சொந்த பந்தங்களின் முன்பாக, ஆண், நான் இந்தப் பெண்ணை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு, இவரை எனது வாழ்நாள் முழுவதும் ஏற்படும் இன்ப துன்பங்களை பங்கிட்டு, இறுதிவரை காப்பேன் என்றும், பெண்ணும் எனக்கு இவரை பிடித்திருக்கிறது. இவரது துன்பத்தை எங்களது துன்பமாகவும், இது போல ஒவ்வொன்றையும் நான், நீ என்று இருந்தவர்கள் நாங்கள் என்றாகிறோம். என்பதை ஆண் ஒப்புக்கொண்டு அதன் அடையாளமாக பெண்ணின் கழுத்தில் இந்துக்கள் உருவாக்கிக்கொண்ட விதிப்படி தாலி என்ற ஒன்றை கட்டுகிறான். பெண்ணும் தன்னுடைய முழு சம்மதத்தோடு ஏற்றுக்கொள்கிறார். இந்துக்கள் தாலி கட்டுகிறார்கள்.

மற்றொரு பகுதியில் ஒரு கூட்டம் வசித்து வந்தது. அவர்கள் தங்களது திருமண ஒப்பந்தமாக மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். இவர்கள் கிறித்தவர்கள் . அப்படியென்றால் கிறித்தவர்களில் ஆணாதிக்கம் கிடையாது என்பதா உங்கள் வாதம்? பெண்களை கட்டாயப்படுத்தி நான்குபேர் இறுகப்பிடித்துக் கொண்டு தாலியை கட்டுவது போல் கூறுகிறீர்கள். நீங்கள் சொல்வது அப்படித்தான் இருக்கிறது. விரும்பி இருவரின் சம்மத்தோடு கட்டப்படுவது தாலி. தாலி ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு அதனால் தாலி கட்டிக்கொள்ள மாட்டோம் என்று எத்தனை பெண்கள் கழற்றியிருக்கிறார்கள். எத்தனை பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள்? எத்தனையோ ஆபரணங்கள் இருக்கும்போதும் அனைத்தையும் திருமணத்தின் போது கட்டுவதில்லை. உனக்கு நான், எனக்கு நீ, என்ற முடிவெடுத்து தாலியை மட்டுமே கட்டுகிறார்கள்.அதனால் தான் அது முக்கியத்துவம் பெறுகிறது. இப்படி நீட்டிக்கொண்டே செல்லலாம் பதிலை காலத்தின் அருமை கருதி முடிக்கிறேன். நன்றி.





பதிலுரை

அப்பாவி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

கடவுள் உண்டா? இல்லையா? என்பது என் வாதமல்ல. கடவுள் உண்டு என்பது அவர்களின் நம்பிக்கை. கடவுள் இல்லை என்பது மறுப்பவர்களின் நம்பிக்கை. இது உலகம் தோன்றிய நாள் முதல் எழுந்து நிற்கும் வினா. இதற்கு உள்ளே செல்ல நான் விரும்பவில்லை.

இயல்பு வாழ்க்கை என்று ஒன்று உண்டு. மனிதன் பாதையில் நடந்து செல்கிறபோது கால்களால் நடப்பதே நடைமுறை. இதை விடுத்து இயல்பாய் நடக்கிறபோதும், மாடிப்படிகளில் ஏறுகிறபோதும் தலைகீழாய் கைகளை தரையில் ஊன்றி நடந்து செல்வது இயல்பானதா? நடைமுறையில் இதுதான் உள்ளதா?

நீங்கள் சொல்கிறபடி கடவுள்களின் வாழ்க்கையும்,பண்டைய கால பண்பாட்டையும் நாம் பார்த்திருக்கிறோமா? ஏதோ ஏடுகளில் இருக்கிற வரிகளையும் அதுவும் உண்மையாக சொல்லப்போனால் செப்பேடுகளில் இருந்ததைக் கொண்டுதான் அன்றைய வாழ்க்கை முறையைக் கூறிக்கொண்டு இருக்கிறோம். கடவுள் மட்டுமல்ல அன்று மனிதன் கூட எப்படி வாழ்ந்தான் என்று கூறுவதெல்லாம் கற்பனை கலந்த கலவை.

ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலை நம்மால் இன்றும் பார்க்க முடிகிறது. எனினும் அவனுடைய வாழ்க்கை முறையையும், அவன் அக்கோயிலை கட்டிய முறையையும் இதைப் போல நிச்சயமாக சொல்லமுடியுமா? ஏடுகள் சொல்கிறது என்று நீங்கள் சொல்லக் கூடும் அவை அப்படியே உண்மையா?

இன்று இருக்கிற ஒரு கவிஞர், ஒரு ஆட்சியாளரைப் பார்த்து எழுதுகிறார் “வாழும் வள்ளுவர் ‘’ என்று புகழ்கிறார். இன்னும் இருநூறு ஆண்டுகள் போன பின்பு இதை உலகம் எப்படிக் கூறும் என்று நினைக்கிறீர்கள்?. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது வள்ளுவர் வாழ்ந்தார் என்றுதான் கூறும். ஏடுகளில் புலவர்கள் எழுதும்போது மிகைப்படுத்திக் கூறியிருக்கிறார்கள். அதனைவிட அந்தச் செய்யுள் வரிகளுக்கு விளக்கவுரை தருகிறவர்கள் தங்களுக்குத் தெரிந்த புலமைகளை உள்ளே புகுத்தி, தங்கள் விருப்பத்திற்கேற்றவாறு விளக்குகிறார்கள்.

ஏன் இவைகளை எழுதுகிறேன் என்றால் சென்ற நூற்றாண்டைப் பற்றி நமக்குத் தெரியும். நமது முன்னோர்கள் வாய்வழியாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இதை சிறிது நம்பலாம். உலகம் தோன்றியது முதல் என்ன நடந்தது என்று கூறுவதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது எவருக்கும் தெரியாது.


நான் தலைமை தாங்கிய ஒரு இலக்கிய நிகழ்ச்சியில், தமிழகத்தின் மிகப்பெரிய பேச்சாளர் ஒருவர் இலக்கிய சொற்பொழிவாற்றினார். அவர் சொன்னார் புற்றுநோய்க்கு மருந்து பாம்பின் விசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாம்பு - புற்று பாம்பு-புற்று பாம்பிற்கும் புற்றுக்கும் சம்பந்தம் உள்ளது என்பதை கண்டுபிடிக்க 21 நூற்றாண்டுகளாகிவிட்டது என்றார். அரங்கம் அதிர கைதட்டுகள் கிடைத்தது. ஆனால் உண்மை என்ன? இதற்கு புற்றுநோய் என்று பெயரிட்டு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது? இதை அவர் சொல்லவில்லை. இன்று தமிழை வியாபாரமாக பயன்படுத்துகிறவர்கள்தான் அதிகம் காணப்படுகிறார்கள். தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக்கொண்டே தங்கள் வருமானத்தை வளர்ப்பவர்கள் இவர்கள்.


தமிழைப்ப்ற்றி இன்னுமொருமுறை தனியாய்ப் பேசுவோம். இன்றைய நடைமுறையில் மக்கள் பழக்க வழக்கங்களைத்தான் நாகரீகம் என்கிறோம். இந்து மதமாக இருந்தாலும் சரி, எம்மதமாக இருந்தாலும் நமது பாரத தேசத்தைப் பொறுத்தவரை குறிப்பாக தமிழ்நாட்டில் வாழ்க்கைமுறை, மக்களின் சுயகட்டுப்பாடு, ஒழுக்கம், ஒரே மாதிரிதான் உள்ளது. ஒழுக்கம் தவறி நிற்பவர்களை நான் எடுத்துக் கொள்ளவில்லை. என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் குருவாகக் கருதுகிற மடாதிபதிகளானாலும் கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறவர்களின் குருவாக இருந்தாலும் தாலிக்கு அருகில் குப்பைகளைக் கோர்த்துக் கொள்ளாதீர்கள் என்பது தான் வாசகம். இன்றைய காலச் சூழ்நிலைக்கான வரிகள் இவை. மதங்களுக்கான வாசகம் அல்ல. மக்களின் வாழ்க்கைக்கான வாசகம்.