கலியுக கர்ணன்...


தேரோடும்
சென்னிமலை வீதிகள்
தேறுதலின்றி
தேம்பித் தேம்பி
அழுகிறது...

எத்தனையோ...
காலடிச்சுவடுகள்
கடந்து போயிருக்கிறது
இந்தப் பாதைகளை...

மாமன்னர்கள்
மறவர்கள்
மந்திரிகள்...
பலரின்...
உலாக்களையும்
ஊர்வலங்களையும்
சந்தித்திருக்கிறது
சாலைகள்...

தரணிதரா...
உன்
சவ ஊர்வலத்தில்தான்
வீதிகள்...
விசும்பி விசும்பி...
விடிய விடிய...
உதிர்க்கிறது
வீர அழுகையை...

உன்
தியாகத்தால்
புழுதி அணுக்களும்
புழங்காகிதமடைந்திருக்கிறது

விபத்தில்...
மூளைச்சாவு
முடக்கிப் போட்டது
உன்னை...


உயிருள்ளபோதே...
அறுத்துக் கொடுத்தாய்
ஆறு உடலுறுப்புகளை
அடுத்தவர்கள் வாழ...

சென்னிமலை...
இரண்டாம் முறையாய்
இறுமாப்புக் கொள்கிறது...

முதல்முறை...
தியாகி குமரனுக்கு...

இரண்டாம் முறையாய்...
வீர இளைஞனே
விளையாட்டு வீரனே
தங்கமே...
தரணிதரா
உனக்காய்...

சென்னிமலை
மண்ணுக்குள் புதைந்து...
எங்கள்
குருதிக்குள்
ஊன்றி விட்டுச் சென்றிருக்கிறாய்
உடல் தானமென்னும்
உயரிய விதையை...

சென்னிமலையின்
மலை முகடுகளும்
மண்டியிட்டு
தரை தொட்டு
வணங்குகிறது
தரணிதரா
உனக்காக...

மனித வாழ்வில்...
புதிய அத்தியாயத்தை
புகுத்தியவனே...

சென்னிமலை...
செருக்கோடு
சேமிக்கிறது
உன்
புகழை...








கிளிப்பிள்ளை...

மாணவன்...

மதிப்பெண்களுக்காக

பாடப் புத்தகத்தின்

வரிகளை

செயற்கையாய் மூளைக்குள்

சேமிக்கும் இயந்திரம்



எல்லாக் கோட்பாடுகளையும்

படித்தோம்...

பரீட்சை எழுதினோம்...


எழுதுகிறோம்...

எழுதியவன்

எழுதியதையே....


ஒரு கோட்பாட்டையாவது

ஒப்புக்காகவாவது

சோதித்தோமா ?


சிந்தனைகளுக்கு

சிறையிட்டு...


சமன்பாடுகளை

சரிபார்த்து

ஆராயாமல்

அப்படியே

ஒப்புவித்து...


மதிப்பெண்கள்...

மதியைத் தின்று

மாணவ சமூகத்தை

மந்திகளாக்குகிறது...



முற்றுப்புள்ளி...

வார்த்தைகள்...
முடிவில்
முற்றுப்புள்ளியை
வாங்க மறுத்து
முரண்டு பிடிக்கிறது

துவரம் பருப்பை
வாங்கிச்செல்ல
நியாய விலைக்கடையில்
நிற்கும்
நீண்ட வரிசையாய்...
காற்புள்ளியை ( , )
வாங்கிக்கொள்ள
காத்துக்கிடக்கிறது
சொற்கள்

ஆச்சரியக்குறியோ
சிகரத்தில் ஏறி
சிம்மாசனமிட்டு
அமர்ந்திருக்கிறது

கேள்வித்தாள்களில்...
எஜமானராய்
எழுந்து நின்று
எழுத்துக்களை
ஏவல் புரிகிறது
வினாக்குறி

இப்படி...

எல்லா மொழியிலும்
எல்லாக்குறிகளும்
உற்சாகமாய்
உலா வருகிறது...

எனினும்...

முற்றுப் புள்ளிக்கு...
முக்காடிட்டு
முடக்கி வைக்கிறது
மொழிகள்....

வளர்ச்சியை
தடுக்கும்
வானளாவிய தடையாய்
வந்து நிற்கிறது
முற்றுப்புள்ளி...


முற்றுப்புள்ளி...
முன்னேற்றத்தின்
முட்டுக்கட்டை
என்பதாலா
ஏற்றுக்கொள்ள
மறுக்கிறது
எந்த மொழியும்?








ஆசை

குழந்தைப் பருவத்தில்
பொருளை...
மண்ணுக்குள்
ஒளித்து விளையாட
மனிதனுக்கு
ஆசை...

முதுமைப் பருவத்தில்
மனிதனை
தனக்குள்
ஒளித்து விளையாட
மண்ணுக்கு
ஆசை...

விளங்கவில்லை...


கஷ்டப்பட்டு சேர்த்த

காசுகள்

காணிக்கையாய்

உண்டியலில்...


சில்லரைச் சத்தத்தில்

சிந்தை மகிழ்வானா

இறைவன்?


சுவாசிக்கும் காற்று

சுழல்கிற பூமி

எழுகிற பிறப்பு

விழுகிற இறப்பு

எல்லாம்

நீ...


அனைத்தும்

உன்னிடத்தில்...


காணிக்கைகள்

எவருக்கு?

கடவுளே விளங்கவில்லை.....

புறப்பட்டு வரட்டும்...


அறுவடை செய்பவன்

ஆடை நெய்பவன்...


இரும்பை இளக்கி

ஈடில்லாச் சூட்டில்

உருக்கி வார்த்து

உபயோகப் பொருளாய்

உருமாற்றுபவன்...


விதைகளோடு

வியர்வைத் துளிகளையும்

விலா நோக

மண் துகள்களுக்குள் தூவி

உலக உயிர்களுக்கு

உணவிடும்

உழவன்...


ஊர் காக்க...

உறக்கத்தைத் தொலைத்து

உறவை உதிர்த்து

உதிரம் உதிர்த்து

உன்னையும் என்னையும்

இராப் பகலாய் காத்திடும்

ராணுவ வீரன்...


துணி துவைப்பவன்

தூய்மைப் பணி செய்பவன்...


வண்டி இழுப்பவன்

வாகனம் ஓட்டுபவன்..


இப்படி...

எத்தனை...

எத்தனை...

தொழில்கள்

தொழிலாளிகள்

எம் தேசத்தில்...


இவர்கள்...

உழைக்கின்ற

ஊதியத்தில்

வயிற்றுக்குச் சோற்றை

வாங்கி உண்பவர்கள்...


என்ன தொழில்

செய்கிறார்கள்

எம் தேசத்தை

ஆள்பவர்கள்?


அன்று...

அன்றாடம்...

அரை வயிற்றுக் கஞ்சிக்கு

அடுத்தவரிடம்

அடைக்கலம் புகுந்தவர்கள்...


அன்றைய

இருப்பு

அரைஞான் கயிறு...


இன்றைய

இருப்பு

ஆயிரக்கணக்கான கோடிகள்...


அதிர்ஷ்ட தேவதையின்

ஆசிர்வாதம் பெற்ற

அதிலாபத் தொழிலாய்

அங்கீகரிக்கப்பட்டு விட்டது

அரசியல்...


சூரியன் என்ன...

இலை என்ன....

கை என்ன...

எந்தச் சின்னமாய்

இருந்தாலென்ன?

சுயலாபச் சுருட்டலில்...


எடுப்பவர்களை

எடுத்தெறிந்து...

தம்மையும்

தாம் சேர்த்ததையும்

கொடுப்பவர்களை

கொண்டு வருவோம்

நம்மை ஆள


புறப்பட்டு வரட்டும்

புது அரசியல்...







வருமா?


இரு இலைகளே

ராஜ இலைகள்...

ராஜாக்களும்

இவர்களே...


இலைக்கூட்டத்தின்

மனதில்

இமைப்பொழுதும்

பயம்


வீசும் காற்றில்

அசைவதற்கும் கூட

அனுமதி கேட்டு

அஞ்சி நிற்கிறது

இலைகள்...



ராஜ இலை...

கீழிருக்கும் இலையை

உச்சாணிக்கு உயர்த்தும்

உடனே

உதிர்த்துவிடும்


இங்கு...

எதுவும்

நிரந்தரமில்லை


நடுக்கத்திலேயே

இலைகள்

நலிவடைந்து போகிறது


நமது

நாட்டுப்பண்ணில்

ஒரு வரி மட்டுமே

இவர்களது

தேசியகீதம்...

ஜெய ஜெய ஜெய ஹே!


அகிலத்திற்கு

அறிமுகப்படுத்திய

ஆணிவேரோ

மண்ணிற்குள்...


அந்த

மூன்றெழுத்து

மூச்சுச் சொல்லை

முடக்கி விட்டது


அந்த

பிரம்மாஸ்திரத்தை

பிரயோகிக்க

பிரியப்படவில்லை

ராஜ இலை...


விளைவு...


தமிழகத்தில்

இலைக் கூட்டத்திற்கு

இப்பொழுது

இலையுதிர்காலம்...


இலைகள்

மீண்டும் துளிர்க்குமா?


வருமோ
வசந்தகாலம்?
வாக்காளனின்
விரல் நுனிகளுக்குள்
விடைகள் கிடக்கிறது


வினா?


தமிழகத்தில்...

அந்த

முதுபெரும்

சூரியனிடமிருந்து

வெப்பத்தை

வாங்கிச் சுவாசிக்கிறது

சூரியக் குடும்பம்


தங்களிடமிருந்தும்

வெளிச்சக்கீற்றுகள்

வெளிப்படுவதாய்

வெளியிடுகிறது

செய்திகளை

ஒவ்வொரு கோளும்...


சூரியனை

பணிகளை

நிறுத்திக் கொண்டு

படுக்கச் சொல்கிறது

சுற்றம்...


ஆதவனை விட

அதிவேகம்

எங்களுக்குள் இருக்கிறது


சூரியனே

சும்மா இரு

இரு கோள்கள்

நாங்கள்

இருளிலும் ஒளிவீசுவோம்

என்கிறது...


இதுபோக...

சூரியக் குடும்பத்தைச்

சுற்றி

எண்ணற்ற சுயநல

நட்சத்திரங்களும்

நகர்ந்து திரிகிறது.


சூரியனுக்குப் பிறகு

சுடர் விடுமோ

சுற்றி நிற்கும்

கோள்கள் ?


எழுகிறது

எதிர்கால வினா


விடை

காலத்தின் கைகளில்...


இல்லை... இல்லை...


வாக்களிக்கும்

விரல்களுக்குள்...




உயிரே உதிராதே !

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

என்று சொன்னான் மகாகவிபாரதி. விரிந்து பரந்து கிடக்கிறது வானம். இவ்வளவு பெரிய வானம் ஒரு மனிதனின் தலை மீது விழ வருகிறது என்று எண்ணினாலே மாண்டுபோவார்கள் பலர். இவ்வளவு சிறிய தலையின் மீது வானமே இடிந்து விழுந்தாலும் அச்சமில்லை. உயிரே போயினும் அச்சமில்லை என்கிறார் பாரதி. இத்தகைய மனநிலை இன்று எத்தனை பேரிடத்தில் காணப்படுகிறது. அஞ்சி அஞ்சி சாவதே வாழ்க்கையில் வாடிக்கையாகிப் போனது. எந்த நேரத்தில் எது நடக்குமோ? எந்நேரமும் பயம். வருவது வரட்டும் வருவதை எதிர்கொள்வோம் என்ற பக்குவம் வேண்டும். சாலையில் வண்டியில் செல்கிற போது நாய்கள் துரத்திக் கொண்டே கடிக்கிற மாதிரி வேகமாக ஓடி வரும். வண்டியை வேகமாக ஓட்டினால் அதைவிட வேகமாக துரத்தும். வண்டியின் வேகத்தைக் குறைத்து எதிர்த்து நின்றால் திரும்பி ஓடி விடும். அதைப் போல பிரச்சனைகள் வருகிற போது அதை எதிர்கொள்ளப்பயந்து ஓடி ஒளிந்தால் தீர்வு கிடைத்துவிடப் போவதில்லை. திரும்பி நின்று எதிர்கொண்டு பார்த்துவிடுவோம் என்று எதிர்த்து நின்றால் எவ்வளவு பெரிய பிரச்சனையும் எளிதில் முடிந்து விடும்.

’’ எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ’’ என்றார் அறிஞர் அண்ணா. எத்தகைய சிக்கல்கள் வந்தபோதும், பழிகள் வந்தபோதும், அன்றாட சிரமங்கள் நம்மை அமுக்குகிற போதும் தீர்வு காண்கிற தீரம் நமக்குள்ளே பெருக்கெடுக்க வேண்டும். அதை விடுத்து கோழைத் தனமாக வாழ்க்கையை மாய்த்துக் கொள்பவர்களை என்னவென்று சொல்வது? வாழ்க்கை என்கிற படகில் பயணம் செய்யும்போது மனவலிமை என்கிற துடுப்புதான் நம்மை வழி நடத்திச் செல்கிறது. ஆற்றைக் கடந்து செல்ல படகிற்கு துடுப்புதான் துருப்புச்சீட்டு. இந்த துடுப்பையே படகு பாரம் என்று நினைத்து தூக்கி எறிந்தால், ஆற்று வெள்ளம் படகை அடித்துக்கொண்டு போகும். இப்படித்தான் இன்று சில படகுகள் சின்னா பின்னமாகிப் போகிறது . வருகிற சிக்கல்களை, வலியை தாங்கி நடக்கிற தகுதிகளை வளர்த்துக் கொள்ளாமல், சிலர் மனவலிமை என்கிற துடுப்பை தூக்கி எறிந்து உயிரை உதிர்த்து விடுகிறார்கள். எள்ளளவு கஷ்டத்தையும் எரிமலையைப் போல் பாவிக்கிற மனநிலை எப்படி வருகிறது இவர்களுக்கு?

மானுட வாழ்வென்ன மறுபடியும் மறுபடியும் கிடைக்குமா?

போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து முன் செல்வேன் என்கிற கவிஞனின் வரிகளை கடைப் பிடிக்க ஏன் மறந்து போகிறோம்.

உலகத் தடகளப் போட்டியில் நேற்று முன்தினம் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன்போல்ட் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 9.58 விநாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். உலகின் அதிவேக வீரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

ஆயினும் இவரது கடந்த காலத்தை திரும்பி பார்க்கவேண்டும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னுடைய காரை ஓட்டிச்செல்கிறபோது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் இவரது இடது காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்த தடைகளை எல்லாம் மறந்து கடின பயிற்சியின் மூலம் இன்று சாதித்துக் காட்டியிருக்கிறார் உசேன்போல்ட்.

காலம் நமக்குத் தருகிற கசப்பு மருந்தைக் கண்டு, கோபத்தின் உச்சியில் மனிதன் தன்னை மறந்து முடிவெடுக்கத் திணறி மூச்சடைத்துப் போகிற மூடப்பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். தன்னை மறந்து செய்கிற தற்கொலைகளை தடுப்போம். உறவுகள் மட்டுமல்ல உலகமே நம் பெயரை உரக்கச் சொல்லட்டும். புல் பூண்டுகளைப் போல வாழ்ந்து புதைந்து போவதைவிட புத்தனைப் போல பூமியின் மீது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நம்மைப் போற்றும்படி சுவடுகளை பதித்துச் செல்வோம்.








இடைத்தேர்தல்- தொண்டாமுத்தூர் தொகுதி நிலவரம்

தமிழகத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல். கொங்குநாட்டில் கோவை மாநகரைச் சுற்றியுள்ள மிகப்பெரிய சட்டமன்றத்தொகுதி தொண்டாமுத்தூர். 393 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியின் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 3,42,000.

சென்ற 2006 தேர்தலில் இந்த தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அப்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4,20,186. இதில் பதிவான வாக்குகளின் சதவீதம் 70.65% ஆகும். 391 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. சென்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் முறையே

கண்ணப்பன் - 1,23,490 - 41.60 % ( ம.தி.மு.க)

எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் - 1,13,596 - 38.27 % (காங்கிரஸ்)

டென்னிஸ் கோவில் - 37,901 - (தே.மு.தி.க)

சின்னராஜ் - 13,545 - (பா.ஜ.க)

இது சென்ற தேர்தல் நிலவரம்.

இந்த தேர்தல் நிலவரம் பற்றி இனி பார்ப்போம்.

தொண்டாமுத்தூரை சுற்றி பொதுமக்களை பார்த்து பேசியதை உங்களிடம் சொல்கிறேன். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கந்தசாமிக்கு பலம் எதுவென்றால், தி.மு.க. வின் தேர்தல் பணிதான். அதனுடன் ஒவ்வொரு ஓட்டுக்கும் அவர்கள் கொடுக்கும் காகித கவர். பூத் சிலிப் கொடுக்கும் போதே உங்கள் வீட்டில் எத்தனை ஓட்டுக்கள் என்று கேட்டு, நான்கு ஓட்டு என்றால் நான்கு சிலிப்பும், நான்கு கவரும் கொடுக்கிறார்கள். அந்த கவரில் இருநூறு ரூபாய் இருப்பதாக சொல்கிறார்கள். இதுவே பெரும் பலம்.

கொங்குநாடு முன்னேற்றக் கழக வேட்பாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் இவரது பலம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொ.மு.க. சார்பில் கோவையில் போட்டியிட்டு 1,28,000 வாக்குகளை பெற்றதால் வாக்களர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்.

மேலும் தே.மு.தி.கவுக்கும், கொ.மு.க வுக்கும், அ.தி.மு.க போட்டியிடாததே பலம். இந்த தொகுதியில் அ.தி.மு.க போட்டியிடாதது அக்கட்சி எடுத்த தவறான முடிவு என மக்கள் சொல்கிறார்கள். அக்கட்சியின் ஓட்டுக்கள் சிதறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கம்யூனிஸ்டும், பா.ஜ.க வும் கணிசமான ஓட்டுக்களைப்பெறும். வாக்களிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இறுதி நிலவரப்படி ஏறத்தாழ 50 % வாக்குக்கள் பதிவானால் வெற்றி யாருக்கு என்று சொல்ல முடியாது. அதிக வாக்குகள் பதிவானால் மட்டுமே காங்கிரஸுக்கு சாதகமாக அமையும். குறைவான வாக்குகள் பதிவானால் கொ.மு.க. , தே.மு.தி.க. இந்த இரண்டில் ஏதோ ஒன்று வெற்றி பெற வாய்ப்புண்டு.





பூண்டு - விளக்கம்

நீண்ட நாளாக ஒரு சந்தேகம் இருந்து வந்தது. இந்த இனம் பூண்டோடு அழிந்தது என்று சொல்கிறார்களே. நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் பூண்டுக்கும் அழிவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?. தமிழ் புலவர்கள் யாரிடமாவது கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் மனதில் இருந்தது. சென்ற வாரம் பேராசிரியர் அப்துல் காதர் அவர்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்த பொழுது அவர் அதற்கு விடையளித்தார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பூண்டு என்பது மிக மிக மெல்லிய தாவரம். தாவரங்களிலேயே நுண்ணியது பூண்டு. ஆனால் நாம் உபயோகப்படுத்தும் வெள்ளை பூண்டு அல்ல. அந்த மிக மெல்லிய உயிரினம் கூட இல்லாமல் உயிரினங்கள் முற்றிலுமாய் அழிவதைத்தான் பூண்டோடு அழிந்தது என்று கூறுகிறார்கள் என்றார். மேலும் தென் மாவட்டங்களில் பூடோடு அழிந்தது என்று சொல்வார்கள். பூடு என்பதுதான் இங்கு பூண்டு என்று மறுவியுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

அரசியல்வாதி

வீட்டில்

செல்லமாய் வளர்கிறது

ஜெர்மனி தேசத்து

நாய்க்குட்டி

ஜென்னி...


வாசலில்...

வழுக்கி நிற்கும் கார்

இங்கிலாந்திலிருந்து

இறக்குமதி

செய்யப்பட்டது


வண்ண விளக்குகள்

வாடிகனிலிருந்து

வாங்கி வரப்பட்டது


பயன்படுத்தும்

பொருள்கள்னைத்தும்

பாரீசிலிருந்து

விமானத்தில்

விரைந்து வந்தவை...


வாயிலில் நிற்கும்

கூர்க்கா கூட

நேற்று வந்த

நேபாளி


இருந்தாலும்...

வாயிலிருந்து

வருகிற

வார்த்தைகளில்

மட்டும்

’’ வாழ்க இந்தியா ”

மற்றுமொரு பதிலுரை

அப்பாவி அவர்களின் கருத்துரைக்கு மீண்டும் நன்றி

தாலியை ஏன் ஆண்கள் சுமப்பதில்லை. இது உங்கள் கேள்வி. என் கேள்வி ஏன் ஆண்கள் சேலை அணிந்து கொள்வதில்லை? ஏன் ஆண்கள் தோடு போட்டுக்கொள்வதில்லை? ஏன் ஆண்கள் மூக்குத்தி போடுவதில்லை? ஏன் ஆண்கள் முத்துமாலையும், மாங்காய் மாலையும், அணிவதில்லை? ஏன் வளையல்களை அணிவதில்லை? இதையெல்லாம் நீங்கள் ஏன் கேட்கவில்லை?

இதற்கெல்லாம் என்ன பதில். பெண்களின் உடலமைப்புக்கு ஏற்ற உடைகளை அவர்கள் அணிகிறார்கள். ஆண்கள் அவர்களது உடலமைப்புக்கு ஏற்ற உடைகளை அணிகிறர்கள். இதில் ஏன் இதையெல்லாம் அணியக்கூடாது என்று கேட்பதைப் போலத்தான் உங்கள் கேள்வியும்.

ஆரம்ப காலத்திலிருந்தே பொன்னும், மணிகளும், நவரத்தினங்களையும் பெண்ணுக்கு அணிவித்துதான் அழகு பார்த்தனர். பெண்கள் ஆபரணங்களை அணிவதில் விருப்பம் உள்ளவர்கள் என்பதால், தாலியை பெண்கள் அணிவது வழக்கமாக வந்தது. ஆகஏன் ஆண்கள் சேலை அணிவதில்லை என்பதற்கு என்ன பதிலோ அதுதான், ஏன் ஆண்கள் தாலி அணிவதில்லை என்பதற்கும் பதில்.

அடுத்து ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்பது உங்கள் வாதம். ஆணாதிக்கம் எந்த யுகத்தில் இருக்கிறீர்கள் நீங்கள்? இன்று பள்ளிக்கூடங்களில் அதிக மதிப்பெண் வாங்கி ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் உருவாகி வருகிறார்கள். தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்து இருப்பவர்களும் பெண்கள் தான். கணிணி யுகத்தில் பெண்களின் கீழ் எண்ணற்ற ஆண்கள் பணிபுரிகிறார்கள். இதைவிட சின்னஞ்சிறு கிராமம் முதல் பெருநகரம் வரை குடும்பத்தில் எடுக்கப்படுகிற முடிவுகள் பெண்களைக் கலந்துதான் எடுக்கப்படுகிறது. ஆணாதிக்கம் இது சென்ற நூற்றண்டின் ஆரம்பத்தில் உபயோகிக்கப் பட்ட சொல். 21ம் நூற்றாண்டுக்கு வாருங்கள்.


என்று ஒரு குழந்தை பிறந்து அதுவும் பெண்ணாக இருந்து, ஒரு குழந்தையாக இருந்தாலும் பெண்ணே போதும் என்று முடிவு செய்தார்களோ அப்பொழுதே ஆணாதிக்கம் என்கிற சொல்லும் மறைந்துவிட்டது. நீங்கள் சொல்வதெல்லாம் எத்தனை பெண் பிறந்தாலும் ஆண்பிள்ளை வேண்டும் எண்ணிய காலம். பாரதி சொன்னதைப் போல ”வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’’ இப்படி பெண்கள் நிலை இருந்த காலம். இன்று பெண்கள் கால் சென்டருக்கு வேலைக்குச் சென்றுவிட்டு இரவு இரண்டு மணிக்கு வீடு திரும்பிக்கொண்டிருக்கிற நிலையில் இருக்கிறார்கள்.

உலகநாடுகள் இன்று பெண்களின் தலைமையை ஏற்றுக்கொண்டு விட்டது. அமெரிக்காவில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி முதல் இந்தியாவில் பிரதமர் இருந்தபோதும் அவரை வழி நடத்துகிற பெண் சோனியாகாந்தி உள்பட நிறைய நாடுகள் பெண்களின் தலைமையின் கீழ் செயல்படுகிறது. விளையாட்டுத் துறையிலும் பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்கம் அம்பேலாகி அனேக நாட்களாகி விட்டது.

தாலியின் மகிமையைப் பற்றி சொல்லியாக வேண்டும் என்கிறீர்கள். சரி சொல்கிறேன். அந்தக் காலத்தில் மக்கள் கூட்டங் கூட்டமாக வாழ்ந்தார்கள். அப்படி வாழ்ந்த போது ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு சில கட்டுப்பாடுகளை, விதிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். இன்றும் கிராமங்களில் கட்டுப்பாடுகள் உள்ளது. ஒரு சில கிராமங்களில் செருப்பு அணிவதில்லை. ஒரு சில கிராமங்களில் புகை பிடிப்பதில்லை. ஒரு சில ஊர்களில் மது அருந்தக் கூடாது. இப்படி விதிமுறைகளை விதித்துக்கொண்ட மக்கள் உண்டு. அந்த வகையில் இந்துக்கள் என்கிற ஒரு சாரார் தங்களது கட்டுப்பாடுகளில் ஒன்றாக ஒரு பெண்ணும், ஒரு ஆணும் திருமணம் என்கிற ஒப்பந்தத்தின் மூலம் இணைகிற பொழுது தங்களது சொந்தங்களின் முன்பாக உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். இப்பொழுதுதான் பதிவு அலுவலகங்கள் வந்திருக்கிறது. பதிவாளர் முன்பு இருவரும் சம்மதத்தோடு கையொப்பம் இட்டு திருமணத்தை பதிவு செய்கிறோம். அதைப்போல சொந்த பந்தங்களின் முன்பாக, ஆண், நான் இந்தப் பெண்ணை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு, இவரை எனது வாழ்நாள் முழுவதும் ஏற்படும் இன்ப துன்பங்களை பங்கிட்டு, இறுதிவரை காப்பேன் என்றும், பெண்ணும் எனக்கு இவரை பிடித்திருக்கிறது. இவரது துன்பத்தை எங்களது துன்பமாகவும், இது போல ஒவ்வொன்றையும் நான், நீ என்று இருந்தவர்கள் நாங்கள் என்றாகிறோம். என்பதை ஆண் ஒப்புக்கொண்டு அதன் அடையாளமாக பெண்ணின் கழுத்தில் இந்துக்கள் உருவாக்கிக்கொண்ட விதிப்படி தாலி என்ற ஒன்றை கட்டுகிறான். பெண்ணும் தன்னுடைய முழு சம்மதத்தோடு ஏற்றுக்கொள்கிறார். இந்துக்கள் தாலி கட்டுகிறார்கள்.

மற்றொரு பகுதியில் ஒரு கூட்டம் வசித்து வந்தது. அவர்கள் தங்களது திருமண ஒப்பந்தமாக மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். இவர்கள் கிறித்தவர்கள் . அப்படியென்றால் கிறித்தவர்களில் ஆணாதிக்கம் கிடையாது என்பதா உங்கள் வாதம்? பெண்களை கட்டாயப்படுத்தி நான்குபேர் இறுகப்பிடித்துக் கொண்டு தாலியை கட்டுவது போல் கூறுகிறீர்கள். நீங்கள் சொல்வது அப்படித்தான் இருக்கிறது. விரும்பி இருவரின் சம்மத்தோடு கட்டப்படுவது தாலி. தாலி ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு அதனால் தாலி கட்டிக்கொள்ள மாட்டோம் என்று எத்தனை பெண்கள் கழற்றியிருக்கிறார்கள். எத்தனை பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள்? எத்தனையோ ஆபரணங்கள் இருக்கும்போதும் அனைத்தையும் திருமணத்தின் போது கட்டுவதில்லை. உனக்கு நான், எனக்கு நீ, என்ற முடிவெடுத்து தாலியை மட்டுமே கட்டுகிறார்கள்.அதனால் தான் அது முக்கியத்துவம் பெறுகிறது. இப்படி நீட்டிக்கொண்டே செல்லலாம் பதிலை காலத்தின் அருமை கருதி முடிக்கிறேன். நன்றி.





பதிலுரை

அப்பாவி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

கடவுள் உண்டா? இல்லையா? என்பது என் வாதமல்ல. கடவுள் உண்டு என்பது அவர்களின் நம்பிக்கை. கடவுள் இல்லை என்பது மறுப்பவர்களின் நம்பிக்கை. இது உலகம் தோன்றிய நாள் முதல் எழுந்து நிற்கும் வினா. இதற்கு உள்ளே செல்ல நான் விரும்பவில்லை.

இயல்பு வாழ்க்கை என்று ஒன்று உண்டு. மனிதன் பாதையில் நடந்து செல்கிறபோது கால்களால் நடப்பதே நடைமுறை. இதை விடுத்து இயல்பாய் நடக்கிறபோதும், மாடிப்படிகளில் ஏறுகிறபோதும் தலைகீழாய் கைகளை தரையில் ஊன்றி நடந்து செல்வது இயல்பானதா? நடைமுறையில் இதுதான் உள்ளதா?

நீங்கள் சொல்கிறபடி கடவுள்களின் வாழ்க்கையும்,பண்டைய கால பண்பாட்டையும் நாம் பார்த்திருக்கிறோமா? ஏதோ ஏடுகளில் இருக்கிற வரிகளையும் அதுவும் உண்மையாக சொல்லப்போனால் செப்பேடுகளில் இருந்ததைக் கொண்டுதான் அன்றைய வாழ்க்கை முறையைக் கூறிக்கொண்டு இருக்கிறோம். கடவுள் மட்டுமல்ல அன்று மனிதன் கூட எப்படி வாழ்ந்தான் என்று கூறுவதெல்லாம் கற்பனை கலந்த கலவை.

ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலை நம்மால் இன்றும் பார்க்க முடிகிறது. எனினும் அவனுடைய வாழ்க்கை முறையையும், அவன் அக்கோயிலை கட்டிய முறையையும் இதைப் போல நிச்சயமாக சொல்லமுடியுமா? ஏடுகள் சொல்கிறது என்று நீங்கள் சொல்லக் கூடும் அவை அப்படியே உண்மையா?

இன்று இருக்கிற ஒரு கவிஞர், ஒரு ஆட்சியாளரைப் பார்த்து எழுதுகிறார் “வாழும் வள்ளுவர் ‘’ என்று புகழ்கிறார். இன்னும் இருநூறு ஆண்டுகள் போன பின்பு இதை உலகம் எப்படிக் கூறும் என்று நினைக்கிறீர்கள்?. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது வள்ளுவர் வாழ்ந்தார் என்றுதான் கூறும். ஏடுகளில் புலவர்கள் எழுதும்போது மிகைப்படுத்திக் கூறியிருக்கிறார்கள். அதனைவிட அந்தச் செய்யுள் வரிகளுக்கு விளக்கவுரை தருகிறவர்கள் தங்களுக்குத் தெரிந்த புலமைகளை உள்ளே புகுத்தி, தங்கள் விருப்பத்திற்கேற்றவாறு விளக்குகிறார்கள்.

ஏன் இவைகளை எழுதுகிறேன் என்றால் சென்ற நூற்றாண்டைப் பற்றி நமக்குத் தெரியும். நமது முன்னோர்கள் வாய்வழியாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இதை சிறிது நம்பலாம். உலகம் தோன்றியது முதல் என்ன நடந்தது என்று கூறுவதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது எவருக்கும் தெரியாது.


நான் தலைமை தாங்கிய ஒரு இலக்கிய நிகழ்ச்சியில், தமிழகத்தின் மிகப்பெரிய பேச்சாளர் ஒருவர் இலக்கிய சொற்பொழிவாற்றினார். அவர் சொன்னார் புற்றுநோய்க்கு மருந்து பாம்பின் விசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாம்பு - புற்று பாம்பு-புற்று பாம்பிற்கும் புற்றுக்கும் சம்பந்தம் உள்ளது என்பதை கண்டுபிடிக்க 21 நூற்றாண்டுகளாகிவிட்டது என்றார். அரங்கம் அதிர கைதட்டுகள் கிடைத்தது. ஆனால் உண்மை என்ன? இதற்கு புற்றுநோய் என்று பெயரிட்டு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது? இதை அவர் சொல்லவில்லை. இன்று தமிழை வியாபாரமாக பயன்படுத்துகிறவர்கள்தான் அதிகம் காணப்படுகிறார்கள். தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக்கொண்டே தங்கள் வருமானத்தை வளர்ப்பவர்கள் இவர்கள்.


தமிழைப்ப்ற்றி இன்னுமொருமுறை தனியாய்ப் பேசுவோம். இன்றைய நடைமுறையில் மக்கள் பழக்க வழக்கங்களைத்தான் நாகரீகம் என்கிறோம். இந்து மதமாக இருந்தாலும் சரி, எம்மதமாக இருந்தாலும் நமது பாரத தேசத்தைப் பொறுத்தவரை குறிப்பாக தமிழ்நாட்டில் வாழ்க்கைமுறை, மக்களின் சுயகட்டுப்பாடு, ஒழுக்கம், ஒரே மாதிரிதான் உள்ளது. ஒழுக்கம் தவறி நிற்பவர்களை நான் எடுத்துக் கொள்ளவில்லை. என்னைப் பொறுத்தவரை கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் குருவாகக் கருதுகிற மடாதிபதிகளானாலும் கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறவர்களின் குருவாக இருந்தாலும் தாலிக்கு அருகில் குப்பைகளைக் கோர்த்துக் கொள்ளாதீர்கள் என்பது தான் வாசகம். இன்றைய காலச் சூழ்நிலைக்கான வரிகள் இவை. மதங்களுக்கான வாசகம் அல்ல. மக்களின் வாழ்க்கைக்கான வாசகம்.



எங்கே போகிறது?

எங்கே போகிறது? எங்கள் பழம்பெரும் பாரத தேசத்தின் பண்பாட்டை தாங்கி நிற்கும் தாய்க்குலங்களின் மனநிலை? உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் இந்திய தேசத்தை அண்ணாந்து பார்த்து அதிசயித்துப் போவது எதைக்கண்டு? எப்படி வேண்டுமானாலும் சுற்றித்திரிந்த மனிதக்கூட்டம் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரையறைக்குள் வந்துவிடத்துடிக்கிறதே யாரைப் பார்த்து?
இவை அனைத்திற்கும் ஒரே விடை பாரதப் பாவைகளின் பண்பாட்டைப் பார்த்து. இந்து மதப்படி ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனையே கடவுளாக நினைக்கிறாள். கணவனும் தன் மனைவியை உயிராக நினைக்கிறான். ஏன் முழு முதற்கடவுளாகிய ஈஸ்வரனே தன் உடலில் பாதியை தன் மனைவிக்குக் கொடுத்து அர்த்தனாரீஸ்வரனாக காட்சியளிக்கிறார். இப்படி கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் உயிருக்குயிராய், அணுவுக்குள் அணுவாய் கலந்து நிற்பதே உயரிய வாழ்க்கை. அப்படிப்பட்ட கணவன் கட்டிய தாலியை நெஞ்சில் சுமப்பதே பெண்ணுக்குப் பெருமை. தாலி கணவனின் நினைவுகளையும், சுய கட்டுப்பாட்டையும் சுகமாக சுமக்கிற சூத்திரக்கயிறு. இது புதிதல்ல. இதுவே நமது பண்பாடு.
இப்பொழுது ஒரு புதுக்கலாச்சாரம் புறப்பட்டு வந்திருக்கிறது.ஏதேதோ சொல்லி ஏமாந்து நிற்கும் மக்களை நல்வழிப்படுத்துவதாய் நகர்ந்து திரிகிறார்கள் காவி உடையில் சில இளைஞர்கள். புதியதாய் முளைத்திருக்கிறார்கள் இவர்கள். எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொடுக்கட்டும். நாங்கள் தடுக்கவில்லை. எங்கள் மனதை உறுத்துகிற விசயம் ஒன்றுதான்.
வாலிப வயதில் காவி உடையணிந்து சொற்பொழிவாற்றும் இவர்களின் படம் பொறித்த டாலர்களை எம் குலப்பெண்களும் நெஞ்சில் சுமக்கிறார்களே ! இது எப்படி நியாயம் ? இந்துமதப் பண்பாட்டை இழிவு படுத்துகிற செயல் இது. எத்தனை கஷ்டம் வந்த போதும் கண்மூடும் காலம் வரை ஏன் ஏழ் பிறப்பிலும் உன்னைத்தவிர ஒருவரையும் மனதாலும் நினைக்க மாட்டேன் என்று வாழ்ந்த எமது பெண்கள் ஏன் இப்படி தரம் தாழ்ந்து போனார்கள். எங்கோ உபதேசிக்கிற உயிருள்ள ஒரு வாலிபனுடைய படம் பொறித்த டாலரை கழுத்தில் அணிவது சரியா? துறவியே ஆனாலும் தூரத்திலேயே இருக்கட்டும். இல்லத்திற்குள் மட்டுமல்ல இதயத்திற்கு அருகிலும் அழைத்துப் போவது அநாகரீகமல்லவா ? மாற்றிக் கொள்ளுங்கள் பழக்கத்தை. மஞ்சள் கயிறுக்கு அருகில் மலிவு விளம்பர குப்பைகளை கோர்த்துக் கொள்ளாதீர்கள். இல்லமே கோயில். இல்லத்தில் இருப்பவர்களே இதய தெய்வங்கள். இதையும் மீறி மனதில் அமைதி இல்லையேல் ஆண்டவன் இருக்கும் ஆலயங்களுக்குச் செல்லுங்கள். அனாவசியமாய் வார்த்தைகளில் வசியம் பூசி சொற்களால் மக்களைச் சொக்க வைக்கிற மனிதர்களிடத்தில் மயங்கி விடாதீர்கள். நாம் பிழையானால் நமது பண்பாடும் பிழையாகிப் போகும்.

குறுக்கெழுத்துப் போட்டி



இடமிருந்து வலம் :

1. திருக்குறளில் 133 ______ உள்ளது.

3. தேர்தலில் போட்டியிடும் அமைப்பின் பெயர்

5. அன்பளிப்பு

8. ஒரு இந்திய மாநிலம்

11. கர்மவீரர்

15. கை

16. நிழல் வேறு சொல்

19. குதிரை

20. பயம்.


வலமிருந்து இடம் :

2. அரசர்களுக்கு வீசப்பட்டது

7. சிரம்

10. வழக்குகளுக்கு முடிவு சொல்பவர்

18. குழந்தைகளுக்கு பிடித்த சிங்க ஆங்கில சினிமா

22. ரேடியத்தை கண்டுபிடித்தவர்


மேலிருந்து கீழ்

2. தமிழகத்தில் அணைக்கட்டு உள்ள ஊர்

8. வானம் - அகரம் சுருங்கியுள்ளது

9. நான்கு வேதத்தில் ஒன்று

15. இடைத்தேர்தல் நடைபெறும் ஒரு தொகுதி


கீழிருந்து மேல் :

3. வா - ஆங்கிலத்தில்

4. கோபம் - இடை இல்லை

6. சூரியன்

10. அகலம் எதிர்ச்சொல்

12. காந்தியடிகள் அடிக்கடி சொல்வது

13. கணவன்

14. சிவகங்கை தொகுதியில் தோற்றவர் பெயரின் முதல்இரண்டெழுத்து

17. மார்கழி ஸ்பெசல் தலைகீழாய்

20. கம்பரின் மகன்

21. வயல்களுக்கு இடப்படும் உர வகையில் ஒன்று

22. பாரின்கன்ட்ரி - தமிழில்









முயற்சி

முன்னூறு முறை விழுகிற போதும் சிறு சலிப்பு கூட
இல்லாமல் புன்னகை தவழ தத்தித் தத்தி தவழ்ந்து எழுந்து நடை பயில்கிறது குழந்தை.தடுமாறி விழுகிற போதும் எத்தனை முறை விழுந்தோம் என எண்ணிக்கை எடுக்கும் பக்குவம் அதற்கு இல்லை.அதன் ஒரே எண்ணம் நடக்க வேண்டும். எழுந்து சென்று எட்டுகிற பொருளை எடுக்க வேண்டும். தொடர்ந்து செய்கிற முயற்சிகளால் தொட்டுவிடுகிறது தன் இலக்கை. வாழ்க்கையிலும் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். இது வெறும் அன்றாட நடவடிக்கை அல்ல.அற்புதமான தத்துவம் இதனுள் பொதிந்திருக்கிறது.எந்த ஒரு மனிதன் தன் தோல்விகளைக்கணக்கெடுக்காமல் தொடர்ந்து முயல்கிறாரோ அவர் நிச்சயம் நினைக்கிற காரியத்தை சாதித்துக் காட்டுவார். அப்படியே கணக்கெடுத்தாலும் பதினைந்து முறை தோல்வியுற்று விட்டோமே என எண்ணாமல் பதினைந்து தடைப் படிகளை கடந்து மேலேறி வந்து விட்டோம். வெற்றிக்கு நமக்கு மிக அருகில் தான் இருக்கிறது. சீக்கிரம் அகப்பட்டு விடும் என்கிற சிந்தனையே வலுவாக இருக்க வேண்டும்.


உலக உயிரினங்களின் ஜீவநாடி எது என்றால் தொடர்ந்து முயற்சிப்பது தான். ஒரு நாள் மட்டுமே உயிர் வாழ்கிற உயிரினத்திலிருந்து முன்னூறு ஆண்டுகள் உயிர் வாழும் ஆமைகள் வரை, வாழ்கிற ஒவ்வொரு நிமிடமும் என்ன நிகழ்ந்தாலும் அதனைத் தாங்குவதற்கும் அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ளவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்கிறது.


எறும்புகள் எப்போதாவது நின்று பார்த்திருக்கிறோமா? ஓய்வு என்பதை ஒரு போதும் ஒத்துக் கொள்வதில்லை அவைகள். ஜடப்பொருள்கள் மட்டுமே அசையாமல் அப்படியே கிடக்கிறது. உயிருள்ள ஒவ்வொன்றும் எடுத்த காரியத்தை சாதிப்பதற்கு ஓராயிரம் முறை ஆனாலும் ஓயாமல் முயற்சிக்கிறது.


ஏன் மனித இனம் மட்டும் இதற்கு விதி விலக்கா? “ சாதிப்பதற்கு முன்னால் சாகக் கூடாது என்று நினைப்பவர்கள் நாங்கள் ” இதை நட்டு வையுங்கள் விதையாக உங்கள் மனதிற்குள். நாளை இது விருட்சமாகி இந்த தேசத்தையே உங்களை நோக்கி உற்றுப் பார்க்க வைக்கும் உற்சாக மந்திரமாகும். இதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பாருங்கள் அசுர வேகம் உங்களுக்குள் உருவாகும்.


அமெரிக்காவைச் சேர்ந்தவர் எரிக்வெய்கன் மேயர் 13 வயதிலேயே கண் பார்வை பறி போய் விட்டது. ஆயினும் அயராத முயற்சியால் 1999-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிக்காட்டினார். முதன் முதலாய் பார்வையற்ற ஒருவரின் பாதச்சுவடுகளை பெருமையோடு பெற்றுக்கொண்டது எவரெஸ்ட் சிகரம். தன்னை விட இவரே உயர்ந்தவர் என்றும் ஒப்புக் கொண்டது. இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். சாதாரண மனிதனாக இல்லாமல் உதாரண மனிதனாக உருவாக வேண்டும் ஒவ்வொருவரும்.


முயற்சிகளே மனிதனின் முதுகெலும்பு. தொடர்ந்து முயற்சிப்போம். எதுவாக இருந்தாலும் அது நமக்கு எட்டித் தொடும் தூரம்தான்.

வழங்குங்கள்...


நண்பர்களே!

உங்களது

வாழ்த்துக்களும், கருத்துரைகளும்தான்

எனக்கு

வார்த்தைகளை

வரவழைக்கும்

வல்லமை மிக்க

வழிகாட்டிகள்



எழுதுகோல்கள்

ஏங்குவதும்

இதற்குத்தான்...


உற்சாக

ஊற்றுகள்

உற்பத்தியாவதும்

இதில்தான்...



பாராட்டுகள்...

பாமரனைக்கூட

பகுத்தறிவாளனாய்

பட்டை தீட்டும்...


தவறாமல்

கருத்துக்களை

வழங்குங்கள்...


தரணியில்...

தமிழோடு

நாமும் வளர்வோம்...

















அனுபவம்

வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு மனிதனும் சேர்க்கிற ஒப்பற்ற சேமிப்பு அனுபவம். மண்ணில் பிறந்த விநாடி முதல் வளர்கிற ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு அசைவும் வாழ்க்கைத் தத்துவத்தை போதிக்கிறது. சந்தோசம், துக்கம், அழுகை ஒவ்வொன்றும் ஏற்படுத்துகிற தாக்கங்களை மனிதன் தன் மூளையில் பதிவு செய்து கொள்வதால்தான் எதிர்காலம் என்கிற ஏணியில் ஏறுகிறபோது தடுமாறாமல் ஏறி உயர்ந்த நிலைக்குச் செல்கிறான். எவர் ஒருவர் தன் கடந்த கால வாழ்வின் கசந்த அனுபவங்களையும், மகிழ்ச்சியோடு இருந்த மனநிலையையும் நினைவில் கொண்டு ஒவ்வொரு அடியையும் முன்னே எடுத்து வைக்கிறாரோ அவரது வாழ்க்கைப் பாதை வெற்றியை நோக்கிச் செல்கிறது. தனக்கு மட்டும் பாடமாக எடுத்துக் கொள்ளாமல் தன் சந்ததிகளுக்கும் அதனை போதித்துச் செல்கிறாரோ அந்த
சந்ததிகளில் அதனை ஏற்றுக் கொள்பவர்கள் மகத்தான சாதனைகள் புரிகிறார்கள்.
சொல்லுகிற அனுபவ வார்த்தைகளை காதில் வாங்காமல் செவிடர்களாய் இருப்பவர்கள், தங்கள் காதுகளை மட்டும் மூடிக் கொள்வதில்லை தங்கள் வாழ்க்கையின் எதிர்கால ஏற்றமிகு கதவுகளையும் மூடிக்கொள்கிறார்கள். இந்த பூமியின் மீது நம் முன்னோர் என கோடிக் கணக்கானோர் பிறந்து தவழ்ந்து, வாழ்ந்து மடிந்து தங்களது பிறப்பின் மிச்சமாக அனுபவங்களை நிரந்தர சொத்தாக மற்றவர்களுக்கு சொல்லிச் சென்றிருக்கிறார்கள். எனவே குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் வாழ்க்கையில் வலிகளும், வலிமைகளும் வரும் வழியை சொற்களால் அனுபவத்தை பகிர்ந்தளிப்போம். நிச்சயம் அவர்களுக்கு இருள் நேரத்தில் கை விளக்காய் மாறும். வாழ்க்கையை வெளிச்ச தேசத்தை நோக்கி நடைபோடச் செய்யும்.

ஒரு சாலையில் வேகமாகப் பயணிக்கிற வாகனம் அந்த சாலையில் “ சாலை பழுது பார்க்கப்படுகிறது கவனம் தேவை ” என்ற அறிவிப்பு பலகையைப் பார்த்தவுடன் ஓட்டுபவர் எச்சரிக்கையாகி வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுகிறார். அதைப் போல அனுபவப் பகிர்வும் ஒரு எச்சரிக்கை தான்.

அனுபவத்தைச் சொல்வதும் அறிவுரையைப் போலத்தான். உலகில் இந்த ஒன்றில்தான் கொடுப்பவர்கள் அதிகம். வாங்கிக் கொள்பவர்கள் மிக மிக குறைவு. எல்லோரும் ஏற்றுக் கொண்டால் இந்த உலகமே அறிவாளிகளின் உறைவிடமாக உருமாறியிருக்குமே ?

தீர்வைத் தேடி...

கவலைகள்

முற்றுகையிடுகையில்

கடவுளின் வழித்தடம்

கண்களுக்கு

புலப்படுகிறது


முயற்சிகள்

முறியடிக்கப்படுகையில்

பகுத்தறிவு

பாதி விலகி

பகவானிடம்

சரணடைகிறது

மனது...


தன்னம்பிக்கை

தளர்ந்து...

வருகிற தடைகளை

தகர்த்தெறிய

தேவதூதனை

தேடுகிறது

மனது...


வழிப்போக்கனின்

வார்த்தைகளிலாவது

வந்து சேருமோ

வளமான தீர்வு?


சோதிடர்கள்

மகான்கள்

மாக்கான்கள்...


எவர் சொல்லும்

ஏற்புடையதாய்...


என்னை தொலைத்து

எவரிடத்திலோ

தேடி...


அயர்ந்து உறங்குகிறதோ

ஆறாவது அறிவு...

தைப்பொங்கல்

தைப்பொங்கலுக்கு...

வழங்குகிற

இலவச சேலையில்

இருக்கவேண்டிய

அளவோ

ஆறு மீட்டர்



இதில்...

அரை மீட்டர்

அமைச்சருக்கும்

அரை மீட்டர்

அதிகாரிகளுக்கும்

அன்பளிப்பாய்...


இறுதியாய்...

இலவசத்தில்

நமக்கு கிடைப்பதோ

நான்கு மீட்டர் நூல் சேலை..


இது...

உடம்பை

போர்த்திக்கொள்ளவே

போதாது...

உடுத்துவது எதை?



தைப்பொங்கலுக்கு

தரையில் பொங்கல்

வைக்கச் சொன்னால்

மக்கள்

தலையிலல்லவா

பொங்கல் வைக்கிறார்கள்

அரசியல்வாதிகள்...

மலை...



அடிக்கடி...

மலையேறுவதால்


பாதையில் கிடக்கிற

தடைக் கற்களைக் கூட

படிக்கற்களாகவே

பார்க்கிற

பக்குவம்

எங்களுக்கு உண்டு...

முன்பு...

இருபது ஆண்டுகளுக்கு முன்பு...

எங்கள் ஊரில்
தாலி முதல் தங்க நகைகள் வரை
தயாரிக்கும் தங்கச் சிற்பி
தங்கைய ஆசாரி

திருமண நாளை
உறுதிப்படுத்தும் உரிமை
புரோகிதர்களுக்கும்
புரட்டிப் பார்க்கும்
பஞ்சாங்கங்களுக்கும்
இம்மியளவும் இருந்ததில்லை

தங்கைய ஆசாரி
தாலி தரும்
திருநாளே திருமண நாள்

அவர்
குனிந்து பர்க்கும் நாள்
கும்பாபிசேகம் ...
நிமிர்ந்து பார்க்கும் நாள்
நிச்சயதார்த்த விழா ...

காதிலிருந்து
காலில் அணியும்
கொலுசு வரை அவரது
கொல்லுப் பட்டறையில்
கொலு வீற்றிருந்தது
தங்கமாய் ....

தங்கம்
அவரிடம்
அனுமதி வாங்கியே
எங்களூருக்குள்
எட்டிப் பார்க்கும் ...

இன்று ...
தடுக்கி விழுந்தால்
தங்க மாளிகைகள் ...

தங்கைய ஆசாரி
எடுபிடியாய்
ஏதோ ஒரு நகைக் கடையில் ...

தங்கம் கூடத்
தகரமாகுமோ ?

பூவுலக சொர்க்கம்


எங்கள் இல்லத்து சுவர்களிலும்
இருக்கின்ற பொருட்களிலும்
அனைத்திலும் அப்பிக் கிடக்கிறது
அன்பு மகளின்
அன்றாட சேட்டைகள்

மொழு மொழு
குழ்ந்தையாய்
தவழ்ந்த போது
தாங்கி மகிழ்ந்த
மொசைக் தரைகள்

பிஞ்சுப் பாதங்களை
பிரியமாய் தாங்கிய
படிக்கட்டுகள்

இப்படி
அஃறினைப் பொருட்களும்
ஆசையோடு வளர்த்தது
உன்னை...

மூன்று வயதில்...
காதுகுத்திய வலியில்
கத்தி அழுத போது
உன் கண்களை விட
எங்கள் கண்களே
அதிகம் அழுதது

படிப் படியாய்
வளர வளர
படிப்பிலும் பக்குவத்திலும்
முதலிடத்தை
முடிந்து வைத்துக்கொண்டவள்
நீ...

ஒவ்வொரு முறை
பார்க்கும்போதும்
நெஞ்சில் பரவும்
பரவசங்கள்...

இந்திர லோகத்தில்
இருந்தாலும்
இப்படியொரு சந்தோசம்
இனியும் வாய்க்காது
எங்களுக்கு...

காலச் சக்கரம்...
கடந்த கால நிகழ்வுகளை
கச்சிதமாய் சேகரித்து
மறக்காமல்
மறுஒலிபரப்பு செய்கிறது

உதாரணம்...
உருவத்திலிருந்து
உச்சரிப்பு வரை
மறுவார்ப்பாய்
மாறியிருக்கும்
மகளே சாட்சி

ஆகாய விமானத்தை விட
அதிவேகமாய்
கடந்து போனது
காலங்கள்...

நிமிர்ந்து பார்ப்பதற்குள்
இருபது வருடங்கள்
இருபது நிமிடங்களாய்...

உன்
இதயத்தின் இசைவோடு
ஒரு
மங்கள நாள்
மணநாளாக
உறவினர் சூழ
உறுதிப்படுத்தப்பட்டது


தினமும்
உன்
கை படாவிட்டால்
நம் வீட்டுக்கதவுகள் கூட
கலங்கிப்போகும்

எங்கள்
செவிச்சுவர்களில்
எப்பொழுதும்
எதிரொலிக்கிறது
என் கண்ணே
உன் குரல்

இனி..
உன் முகம் பாராமல்
காலை மாலை
இரவு வேளை என்று
காலங்கள்
இனி கடந்து போகுமோ?

எங்களை
கடத்திப்போகுமோ?

ஒப்பில்லா சந்தோசம்
ஒருபுறம்...

வெந்தணலில் வேகின்ற
பூக்களின்
புல்லிவட்டங்களைப் போல்
பிரிவுத்துயரம்
மறுபுறம்

மகளின்
மணக்கோலம் கண்டு
விழிகளிலிருந்து
விழுகிறது
ஆனந்தக் கண்ணீர்

ஆயினும்..
ஆயினும்..

அது
கண்ணீர்...

குறுங்கணக்கு

நிமிர்ந்து  பார்க்கவும்

நிற்கவும்

நித்திரைக்கும் கூட

நிமிடங்களில்

பற்றாக்குறை...


இன்று...

சந்தோசம், குதூகலம்

சம்பாத்தியற்குள்

குவிந்து கிடப்பதாய்

குறுங்கணக்கு


அன்பின் பரிமாறல்கள்

ஆழப்புதைக்கப்பட்டு

அதன்மேல்

அடுக்கப்படுகிறது

கரன்சிக் கட்டுகள்...



இந்த ...

தேடலின் மு்டிவுகளில்...


அன்யோன்யங்கள்

விடைபெற்று

விவாகரத்துக்களை நோக்கியே

விரைவாய்ப்  பயணிக்கிறது



இன்று...

திருமணங்களை விட

மறுமணங்களே

அதிகமாய்

அகப்படுகிறது

கண்களுக்கு...


எல்லாம்

அவசரத்தில்...


சுகப்பிரசவத்தைச்

சுருக்கி

ஆயுதங்களின்

அறுவைச் சிகிச்சையில்

அவசரப் பயணம்

உலகிற்கு...


பிறந்ததே

அவசரத்தில்

பிறகென்ன...


விழிகள் சுருங்கி

விரிவதில் கூட

வீணாகிப்போகிறது

வினாடிகள்...


இப்படி...

இயங்கும்

மனித  இயந்தி்ரங்களின்

அதிவேகத்தை

அவசரமாய்

தாக்குகிறது

அதிநவீன நோய்கள்


அதுவும்

அவசரத்தில்...


ஆம்...

எல்லாம்

அவசரத்தில்...


பூமிப் பந்திற்குள்

புதைவற்கும்...

கேட்ட செய்தி : ஒரே ஒரு முறை




கங்கையில்  ஆயிரம்  முறை  ஸ்நானம்  செய்தலும்  

ஆலயத்தை  ஆயிரம்  முறை  வலம்  வருதலும்

தாயை  ஒரே  ஒரு  முறை  வணங்குவதற்கு  நிகராகாது

இந்தி்ய வாக்காளன்

வாக்குச் சாவடியில்

விரல் நுனியில்

வாங்கிய  மையை

தலையில் தடவினான்...


வருங்கால ஆட்சியாளர்கள்...

தலையில்

எதைத்தடவினாலும்  

ஏற்றுக்கொள்ள

ஏதுவாக...

வணங்கா மண்ணே...

எங்கள்
பாட்டிகளும் பாட்டன்களும்
அம்மாக்களும் அப்பாக்களும்
வாழ்ந்த போதும்
வீழ்ந்த போதும்
மூச்சடக்கி முடிந்த போதும்
வாரி அணைத்த மண்.

எங்கள்
தலை வணங்கா
தமிழீழ மண்ணே...
உன்னையும்
தூளாக்கி
தூக்கி வைத்திருக்கிறோம்
சலனமில்லா
சயனைடு குப்பிக்குள்...

உயிர்விடும் போதும்
உன்னை விடவில்லை
உன்னைத் தின்றே
உயிரை உடைக்கிறோம்

உள்ளிருக்கும்
மண்ணிலிருந்து
முளைத்து வருவோம்
முன்னூறு முறை...

ஆம்...
உள்ளிருக்கும்
மண்ணிலிருந்து
முளைத்து வருவோம்
முன்னூறு முறை...


தற்காலிகமாய்...
ராஜ  விசுவாச
எச்சத்தில் முளைத்திருக்கும்
எடுபிடி காளான்களை
எரித்து...

எம் மண்ணே
பொறுத்திரு...

சரித்திரம் மாறும்
உன் தலையில்
மணிமுடி ஏறும்...

வாயில்


தாயின்

கருவறை  வாயிற் கதவு

திறந்தது...

மனிதப்   பயணம்

மண்மீது

வந்தது...



எந்த

வாயிற் கதவு

திறந்தால்

எங்கள்

வறுமை  தொலைந்து

வந்து  சேரும்

வளமான   வாழ்வு ?

வைகறை


    • அனுதினமும்
            அடர்த்தியான

             இருட்டைக்  கிழித்து

             வெளிச்சதேசம்

             வெளியாவதற்கு  முன்...


             பூசிய  இருட்டு
     
             புலம்  பெயர்ந்து

             ஆதவன்

              துயில்  எழும்

              அதிகாலை

              வைகறை...