பொதிசுமக்கும் கழுதைகள்

சுதந்திர தேசத்து
அடிமைகள்
நாங்கள்...


எவ்வளவு...
ஏற்றினாலும்
பொருத்துக் கொண்டு
பொதிசுமக்கும்
கழுதைகள்...


குடும்ப வருமானத்தின்
பெரும்பகுதியை
பெட்ரோல் குடிக்கிறது...


மிஞ்சியதை...
மிகுதியாய்க் குடிக்கிறது
டாஸ்மாக் கடைகள்...


பார்த்த பொருளை வாங்க...
பாக்கெட்டிலிருந்து
பணம் எடுப்பதற்குள்
பாதி விலை
ஏறிவிடுகிறது...


எப்போதும்...
விலைவாசி
ஏறுமுகமாய்...


ஈட்டுகின்ற
வருமானமோ...
இறங்கு முகமாய்...


இப்படியே...
வாழையடி வாழையாய்...
வருகிறது இந்தியனின்
வாழ்க்கைப் போராட்டம்...


என்று வரும்...
எதார்த்தத்தைப் 
புரிந்து கொள்ளும்
எளிமையான அரசு...


அது வரை...


எவ்வளவு...
ஏற்றினாலும்
பொருத்துக் கொண்டு
பொதிசுமக்கும்
கழுதைகள்
நாங்கள்...















அடடா... மழைடா..

ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இதுவரை பெய்த மழைகளைக காட்டிலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடியப் பெய்த மழையே கனமழை. இரவு 12 மணிக்கு தொடங்கி காலை 7 மணி வரை கொட்டித்தீர்த்து விட்டது வானம்.  ஏகப்பட்ட இடி, மின்னல்கள். சாலைகளெல்லாம் வெள்ளத்தால் அரித்துக்கிடக்கிறது. திருப்பூரில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆற்றின் கரையோரம் இருந்த வீடுகள் அடித்துச்செல்லப்பட்டது. நிறையப்பேரைக் காணவில்லை ஓரத்துப்பாளையம் அணையில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் உடல்களை.

           இதைக்காணுகிற போது... இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை மனித இனத்தையும், நிறைய நிலப்பரப்பையும் விழுங்கியிருக்கிறது  தண்ணீர். இயற்கையே உயிரினங்களை உருவாக்குகிறது.  இறுதியில் இயற்கையே உயிர்களை அழிக்கிறது. தீயினால் ஏற்படும் அழிவு குறைவு.  தண்ணீர் மட்டுமே பேரழிவை உண்டாக்குகிறது.
         
           வானிலையைப் பற்றிய அறிக்கை மூலம் மழை வருவதைச் சொல்லிவிட முடியும். வெள்ளம் வரப்போவதை யாரால் சொல்லமுடியும். உயருகிற நீர் மட்டம் ஊர்மக்களை இழுத்துச்செல்கிறது. உலகம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை கால்வாசி நிலப்பரப்பை கடல் விழுங்கியிருக்கிறது. கோவலன், கண்ணகி வாழ்ந்த செல்வச்செழிப்பு மிக்க பூம்புகார் கடலுக்கடியில் இருக்கிறது. இன்றும் பூம்புகார் என்ற பெயர் இருக்கிறது. நாம் அங்கு சென்றால் கடற்கரை மணலையும், படகுகளை மட்டுமே பார்க்க முடிகிறது. ஒரு துறவி எழுதிய தூய தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தில் இடம் பெரும் வணிகச்சிறப்புமிக்க துறைமுக நகரமான பூம்புகாரை தண்ணீர் தழுவி அணைத்துக்கொண்டது. 

     போதும் தண்ணீரே உன் பொல்லாத கோபம். “ஆறு கரையினில் அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம்” என்ற கண்ணதாசன் வரிகளுக்கேற்ப அடிக்கடி கரை மீறுவதை கட்டுப்படுத்தி எங்களை வளப்படுத்திட வேண்டும். நாமும் நதிகளின் ஓட்டத்தில் ஏற்படும் தடைகளை நீக்க  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


விலைவாசி

பாமரன் கேட்டான்... 
என்று... குறையும் 
எகிறிக்குதிக்கும் 
எங்கள் தேசத்து 
விலைவாசி 


அரசியல்வாதி... 
அவசரமாய்ச் சொன்னான்... 


விலைவாசியை விட
பன்மடங்கு உயர்ந்திருக்கிறது... 
பாமரன்
வாக்களிக்க.. 
வாங்கும் விலை... 


விலைவாசி ஏற்றத்தால்... 
பாதிக்கப்படுவது 
பாமரனோடு 
நாங்களும் தான்...

கிழக்கைக் கிழித்து...


எழுதுவதற்கு...
ஏங்கிக் கிடக்கும்
விரல்கள்...

முழு நேரமும்...
பணிக்குள்
மூழ்கிக்கிடக்கும்
மூளை...

ஆயிற்று...
ஆறேழு மாதங்கள்
அவசரமாய் உதிர்ந்து
போயிற்று...

இருள் படர்ந்த
இரவு விலகி
கிழக்கைக் கிழித்து
வைகறைச் சூரியன்
வருகிறது வெளியே...

இளைப்பாறிய...
நாட்கள் போய்...

இனி..
கார்த்திகை மழையாய்...
கவிதைகள்
நனைத்திடும்...

அரசியல் களம்

வைகைநதி
வறண்டு கிடக்கிறது...
வருத்தமில்லை...

அனைத்து கட்சிகளுக்கும்
பொதுக்கூட்டம் நடத்த
பொருத்தமான
மைதானம் கிடைத்ததில்
மட்டற்ற மகிழ்ச்சி...

கண்ணில்
நீரோடு
காத்திருக்கிறான்
விவசாயி...

குழந்தைகளுக்காக...

உலகிலேயே மிகவும் கடினமான செயல், ஆழ்கடலின் ஆழத்தை கண்டுபிடிப்பதோ அல்லது மிகப்பெரிய மலையைப் பெயர்த்தெடுப்பதோ அல்ல. ஏனென்றால் இதற்கெல்லாம் நவீனக் கருவிகள் வந்துவிட்டது. இவை எல்லாவற்றை விட மிகப் பெரிய செயல் பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்த மாணக்கராய் வெளிவருவதுதான். இதே போல் இன்றைய பெற்றோர்களின் நிலையும் மிகச்சிரமம்தான். நான் கடந்த வாரம் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்த பொழுது எனக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் பேசிய பேச்சு என் காதுகளில் விழுந்தது. அவர் தன் அருகில் அமர்ந்திருந்தவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். என்னுடைய மகனிடம் படி என்று மட்டும் சொல்லிவிட்டால் போதும் ஒரு விரோதியைப் பார்ப்பது போல என்னைப் பார்க்கிறான் என்று. இந்த வார்த்தைகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. வளர்ந்து வரும் பிள்ளைகளிடம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் மேல் படி என்று சொல்ல முடியவில்லை. இதையே அடிக்கடி சொல்லி, நம் மீது பிள்ளைகளுக்கு வெறுப்பு வந்து விடுமோ? என்ற பயம் நம் நெஞ்சுக்குள் எட்டிப் பார்க்கிறது. அதே சமயம் சிறிது நேரம் அன்பாகப் பேசினாலும், போதும் இதற்கு மேல் இவர்களிடம் பேசினால் நம்மிடம் பயம் போய்விடும், அப்புறம் நாம் சொல்வதைக் கேட்கமாட்டார்கள் என்கிற எண்ணம் மனதிற்குள் வந்துவிடுகிறது. இப்படி பள்ளிப் படிப்பினால் அதிகம் பாதிப்படைவது பெற்றோர்களா? பிள்ளைகளா? என்று பட்டிமன்றம் நடத்தினால் தீர்ப்பு சொல்வது சிரமம்தான். இன்றைய இந்தியாவில் இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் விரும்பிப் பார்க்கும் விளையாட்டு கிரிக்கெட். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கடவுள் என்று வர்ணிக்கப் படுபவர் சச்சின் டெண்டுல்கர். எண்ணற்ற உலக சாதனைகளைப் படைத்தவர். ஏன் நேற்று குவாலியரில் நடந்த ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்தது கிரிக்கெட் விளையாட்டின் பிதாமகனாக அவரை உயர்த்தியுள்ளது. 1971ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டி அறிமுகமானது முதல் 2010 பிப்ரவரி 23ம் தேதி வரை உலகில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் இதுவரை இச்சாதனையைத் தொடவில்லை. தெண்டுல்கர் இதையும் செய்து இந்தியனின் பெருமையை உலகத்திற்கு உணர்த்தியுள்ளார். இத்தகு சிறப்பு மிக்க தெண்டுல்கருக்கே அவரது மனதை ஒருமுகப்படுத்த மனோதத்துவ நிபுணரின் அறிவுரைகள் அவ்வப்போது தேவைப்படுகிறது என்றால் நமது குழந்தைகளின் மனதை அறிந்து ஆலோசனை சொல்ல ஒரு ம்னோதத்துவ நிபுணர் தேவையா? இல்லையா? அந்த நிபுணர் யார்? பெற்றோர்களாகிய நாம் தான். பிள்ளைகளை ஊக்குவிக்கும் உன்னதப் பணி நமக்கு இருக்கிறது. ஆயிரம் வேலைகள் நமக்கு இருக்கலாம் நிற்காமல் ஓடி ஓடி உழைப்பதெல்லாம் எதற்காக? குழந்தைகளின் எதிர்காலத்திற்காக. எதிர்காலத்திற்காக உழைக்கும் நாம் நிகழ்காலத்தை நினைக்க மறுக்கிறோம். தினமும் சிறிது நேரத்தை குழந்தைகளுக்காக ஒதுக்குவோம். உன்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் விதைப்போம். விண்ணிலும் மண்ணிலும் விஞ்ச முடியாதது எதுவும் இல்லை என்பதை எடுத்துரைப்போம்.

கலியுக கர்ணன்...


தேரோடும்
சென்னிமலை வீதிகள்
தேறுதலின்றி
தேம்பித் தேம்பி
அழுகிறது...

எத்தனையோ...
காலடிச்சுவடுகள்
கடந்து போயிருக்கிறது
இந்தப் பாதைகளை...

மாமன்னர்கள்
மறவர்கள்
மந்திரிகள்...
பலரின்...
உலாக்களையும்
ஊர்வலங்களையும்
சந்தித்திருக்கிறது
சாலைகள்...

தரணிதரா...
உன்
சவ ஊர்வலத்தில்தான்
வீதிகள்...
விசும்பி விசும்பி...
விடிய விடிய...
உதிர்க்கிறது
வீர அழுகையை...

உன்
தியாகத்தால்
புழுதி அணுக்களும்
புழங்காகிதமடைந்திருக்கிறது

விபத்தில்...
மூளைச்சாவு
முடக்கிப் போட்டது
உன்னை...


உயிருள்ளபோதே...
அறுத்துக் கொடுத்தாய்
ஆறு உடலுறுப்புகளை
அடுத்தவர்கள் வாழ...

சென்னிமலை...
இரண்டாம் முறையாய்
இறுமாப்புக் கொள்கிறது...

முதல்முறை...
தியாகி குமரனுக்கு...

இரண்டாம் முறையாய்...
வீர இளைஞனே
விளையாட்டு வீரனே
தங்கமே...
தரணிதரா
உனக்காய்...

சென்னிமலை
மண்ணுக்குள் புதைந்து...
எங்கள்
குருதிக்குள்
ஊன்றி விட்டுச் சென்றிருக்கிறாய்
உடல் தானமென்னும்
உயரிய விதையை...

சென்னிமலையின்
மலை முகடுகளும்
மண்டியிட்டு
தரை தொட்டு
வணங்குகிறது
தரணிதரா
உனக்காக...

மனித வாழ்வில்...
புதிய அத்தியாயத்தை
புகுத்தியவனே...

சென்னிமலை...
செருக்கோடு
சேமிக்கிறது
உன்
புகழை...